டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இ-மெயில் மூலம் தலைமை செயலகம், 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை

சென்னை: டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் போலியான இ-மெயில் முகவரி மூலம் சென்னை தலைமை செயலகம் மற்றும் 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எம்.ஆர்.சி.நகரில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேற்று முன்தினம் மாலை மெயில் ஒன்று வந்தது. அதில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் டிஜிபி பெயரில் போலியான முகவரி தயாரித்து அதன் மூலம் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. செட்டி நாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு இதுவரை 9 முறை வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னை தலைமை செயலகம், மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மிண்ட் பகுதில் உள்ள ராணுவ பள்ளிக்கும் இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் தலைமை செயலகம் மற்றும் 2 பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமை செயலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் தலைமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இ-மெயில் மூலம் தலைமை செயலகம், 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: