ஓட்டேரியில் நள்ளிரவில் அமரர் ஊர்தி, ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: தீ வைத்து எரிப்பா? விசாரணை

பெரம்பூர்: ஓட்டேரியில் நள்ளிரவில் அமரர் ஊர்தி மற்றும் ஆட்டோ முற்றிலும் எரிந்து சேதமானது. நாச வேலை காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்குட்பட்ட வெங்கடம்மாள் சமாதி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகே அமரர் ஊர்தி மற்றும் ஆட்டோ நேற்றிரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென அமர் ஊர்தி, ஆட்டோ தீப்பற்றி எரிவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. உடனே ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தகவலறிந்து கீழ்பாக்கம் தீயணைப்பு படையினரும் விரைந்தனர். அதற்குள் அமரர் ஊர்தியும், ஆட்டோவும் முற்றிலும் எரிந்து சேதமானது. இருப்பினும்், தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர்.

இதுகுறித்து ஓட்டேரி பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய் (34) மற்றும் அமரர் ஊர்தி வாடகைக்கு விட்டு தொழில் செய்து வரும் புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (29) ஆகியோர் ஓட்டேரி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் நாச வேலை காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

The post ஓட்டேரியில் நள்ளிரவில் அமரர் ஊர்தி, ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: தீ வைத்து எரிப்பா? விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: