கடலூர் அருகே பயிற்சியின் போது ஈட்டி குத்தியதில் 10ஆம் வகுப்பு மாணவர் மூளைச்சாவு..!!

கடலூர்: கடலூர் அருகே பார்வதிபுரத்தில் பயிற்சியின் போது ஈட்டி குத்தியதில் 10ஆம் வகுப்பு மாணவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற 15 வயது மாணவன் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்து மாலை நேரம் பள்ளியில் உள்ள விளையாட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே சிலம்பம் பயிற்சியில் பல்வேறு பதக்கங்கள் மற்றும் சாதனைகள் புரிந்துள்ள மாணவர் வட்டு எறியும் பயிற்சியில் 24ம் தேதி ஈடுபட்டுள்ளார். அப்போது அதே திடலில் மறு முனையில் ஈட்டி எறியும் பயிற்சி நடைபெற்றுள்ளது. இத்தகைய சூழலில் மாணவர் கிஷோர் விழுந்த வட்டை எடுக்க சென்ற நேரத்தில் மற்றொரு மாணவர் ஈட்டியை வீச அந்த ஈட்டி கிஷோரின் தலையில் பாய்ந்தது. தலையில் ஈட்டி பாய்ந்த மாணவனை உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு அவர் அங்கிருந்து விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிஷோர் மூளை சாவு அடைந்து விட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன் காரணமாக அவர் உயிர்பிழைக்க மாட்டார் என்றும் மூளை சாவு அடைந்து விட்டதால் அவர் கோமா நிலையில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததை கேட்டு அங்கிருந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனை அறிந்த அவரது தாய் உடனடியாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை வடலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மாணவர் உயிரிழப்பு காரணம் பள்ளி நிர்வாகம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிய திடல் உள்ள பள்ளியில் ஈட்டிஎறிதல் மற்றும் வட்டு எறிதல் ஒரே இடத்தில் நடத்துவது மிக பெரிய தவறு. அந்த தவறை பள்ளி செய்த காரணத்தினால் தான் மாணவன் கோமா நிலைக்கு சென்றுள்ளார் என்று குற்றம்சாட்டி வடலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். வடலூர் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் தற்போது விசரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் பணியில் அவரது உறவினர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் தற்போது மகனின் உடலை பார்ப்பதற்காக காத்திருக்கின்றனர்.

 

The post கடலூர் அருகே பயிற்சியின் போது ஈட்டி குத்தியதில் 10ஆம் வகுப்பு மாணவர் மூளைச்சாவு..!! appeared first on Dinakaran.

Related Stories: