ஆசிரமம் நடத்தி போதை காளான், கஞ்சா விற்பனை: போலி சாமியார் கைது

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கூக்கால் கிராமப்பகுதியில் போதை காளான், கஞ்சா போன்றவை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கொடைக்கானல் ஆர்டிஓ சிவராமன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் ஆசிரமம் ஒன்று நடத்தப்படுவதாகவும், அங்கு சுற்றுலாப்பயணிகளை வரவழைத்து, போதை காளான் மற்றும் கஞ்சா விற்கப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று அந்த ஆசிரமத்தில் சோதனை செய்ததில், போதை காளான் மற்றும் கஞ்சா கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

விசாரணையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வடகாடுபட்டியைச் சேர்ந்த பி.இ பட்டதாரியான தன்ராஜ் (34) என்பவர் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மலைப்பகுதியில் நிலம் வாங்கி போலி சாமியாராக மாறி, ஆசிரமம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்து போலி சாமியாரான தன்ராஜை கைது செய்தனர். இதைதொடர்ந்து ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

The post ஆசிரமம் நடத்தி போதை காளான், கஞ்சா விற்பனை: போலி சாமியார் கைது appeared first on Dinakaran.

Related Stories: