கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வெளிநாட்டு தொலைபேசி குறித்து இன்டர்போல் போலீசார் விசாரணை: ஊட்டி நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வெளிநாட்டில் இருந்து வந்த தொலைபேசி விவாதம் குறித்து இன்டர்போல் போலீசாரை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக ஊட்டி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.

பின்னர், பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். 5 ஆண்டுகளாக இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர். இதனைத்தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட நீதிபதி அப்துல்காதர் இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து அரசு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், ‘‘கொலை நடந்த ஓரிரு நாட்களில் கனகராஜ் செல்போனிற்கு வெளிநாட்டு செல்போனில் இருந்து வந்த அழைப்புகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதை நீதிபதியிடம் தெரிவித்தோம். மேலும், இந்த வழக்கினை பல கோணங்களில் விசாரித்து வருகிறோம் எனவும் தெரிவித்தோம். வெளிநாட்டில் இருந்து வந்த தொலைபேசி விவாதம் குறித்து இன்டர்போல் போலீசாரை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக நீதிபதியிடம் தெரிவித்தோம். இதனைத்தொடர்ந்து, நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்’ என்றார்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வெளிநாட்டு தொலைபேசி குறித்து இன்டர்போல் போலீசார் விசாரணை: ஊட்டி நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: