வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதாக விலங்குகள் நல அமைப்புகள் மீதான புகாரில் உண்மையில்லை: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்

சென்னை: சட்டவிதிகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வருவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிரான புகாரை விசாரித்து அதில் உண்மையில்லை என்று தெரியவந்ததையடுத்து புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பீட்டா, டபிள்யு.வி.எஸ்., ஐ.பி.ஏ.என் ஆகிய விலங்குகள் அமைப்புகளுக்கு அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து நிதியை பெறுகிறார்கள்.

அந்த நிதி மூலம் கால்நடை ஆராய்ச்சி சம்பந்தமாக நிறுவனங்கள் நடத்தி வருகிறார்கள். அதற்கு அரசிடம் உரிய அனுமதியை பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும், நீதிபதி கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிரான புகாரை விசாரித்ததில் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து, மனுதாரரின் புகார் மனு மீது இறுதி உத்தரவு பிறப்பித்து அது குறித்து தெரிவிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதாக விலங்குகள் நல அமைப்புகள் மீதான புகாரில் உண்மையில்லை: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: