மெக்கானிக் வீட்டில் கொள்ளையடித்து விட்டு ஹாயாக சாப்பிட்டுச் சென்ற திருடர்கள்: திருச்சி அருகே பரபரப்பு

சமயபுரம்: திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்த அகிலாண்டபுரம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் இளஞ்செழியன்(55). டிராக்டர் பழுதுபார்க்கும் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி சுகுணா(52). இவர்களுக்கு விவேக், விக்னேஷ் என்ற மகன்கள் உள்ளனர். நேற்றிரவு வீட்டின் கீழ்தளத்தில் தனி அறையில் சுகுணாவும், மேல்தளத்தில் இளஞ்செழியன் மற்றும் அவரது மகன்களும் தூங்கினர். நள்ளிரவு மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை தள்ளி கம்பியை விட்டு உள்தாழ்ப்பாளை திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் தரை தளத்தில் இருந்த 2 பீரோக்களை உடைத்து, அதில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம், உண்டியல் டப்பாவை திருடினர்.

பின்னர் வீட்டின் சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த உணவுகளை பாத்திரத்துடன் எடுத்துக்கொண்டு தப்பினர். இன்று அதிகாலை இளஞ்செழியன் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோக்கள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோக்களில் இருந்த நகையும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு அருகே உள்ள வயலில் உட்கார்ந்து உணவை சாப்பிட்டு விட்டு சென்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post மெக்கானிக் வீட்டில் கொள்ளையடித்து விட்டு ஹாயாக சாப்பிட்டுச் சென்ற திருடர்கள்: திருச்சி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: