வழக்கறிஞர்கள் தொழில் நடைமுறை சட்டத்தை அமல்படுத்த கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் தொழில் நடைமுறை சட்டத்தை கடுமையாக அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2008ம் ஆண்டு முதல் இதுவரை 15 ஆண்டுகளில் மொத்தம் 15,924 புதிய வழக்கறிஞர்கள் தங்களை பார்கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்கள். கடந்த 2013ம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், சேலம், ராசிபுரம் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நடராஜன், கடந்த 2014ம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் வழக்கறிஞர் நித்தியானந்தம், ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். பல வழக்குகளில் வழக்கறிஞர்கள் குற்றவாளியாகவும் சேர்க்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வழக்கறிஞர் தொழிலுக்கு அவமானத்தையும், பொதுமக்களுக்கு வழக்கறிஞர் தொழில் மீதான நம்பகத் தன்மையையும் இழக்கும் நிலையையும் உருவாக்கியுள்ளது. எனவே, வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, வழக்குகளில் குற்றவாளிகளாக வழக்கறிஞர்கள் இருப்பதை தடுக்க வழக்கறிஞர்களுக்கான தொழில் நடைமுறை சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

The post வழக்கறிஞர்கள் தொழில் நடைமுறை சட்டத்தை அமல்படுத்த கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: