முதுமையில் கவனிப்பாரின்றி தவித்த தம்பதி விஷம் குடிப்பு மனைவி பலி; கணவனுக்கு சிகிச்சை வந்தவாசி அருகே பரிதாபம்

வந்தவாசி, ஜூலை 23: வந்தவாசி அருகே முதுமையில் கவனிப்பாரின்றி தவித்த முதிய தம்பதி விஷம் குடித்தனர். இதில், மனைவி பலியானார். கணவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(72). இவரது மனைவி குப்பம்மாள்(65). தம்பதிக்கு சீனுவாசன்(52), பாலகிருஷ்ணன்(50), பாபு(45) என்ற மகன்களும், சரசு என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் கூலி வேலை செய்து வருகின்றனர். 3 பிள்ளைகளும் சென்னையில் பல்வேறு பகுதியில் குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்து வரும் நிலையில், முனுசாமி, குப்பம்மாள் இருவரும் மழையூர் கிராமத்திலேயே வசித்து வருகின்றனர். மூத்த மகன் சீனுவாசன் தாய், தந்தை வசிக்கும் பகுதியில் உள்ள காலி மனையில் வீடு கட்டி வருகிறார். இதற்கான பணியை கிராமத்தில் இருந்து கண்காணித்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முனுசாமி, அவரது மனைவி குப்பம்மாளுக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளதால் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளனர். உடனிருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லாத நிலையில் வாழ்வதை விட சாவதே மேல் என எண்ணிய தம்பதி, கடந்த 20ம் தேதி இரவு வீட்டை உள்தாழ் போட்டு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

மறுநாள் காலை, மகன் சீனுவாசன் கட்டி வரும் வீட்டிற்கு தண்ணீர் பிடிக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் கதவை தட்டினார். கதவு திறக்காததால் சீனிவாசன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது, தாய் தந்தை இருவரும் மயங்கிய நிலை வாயில் நுரை தள்ளியவாறு கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், இருவரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்பம்மாள் நேற்று இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள முனுசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னை துரைப்பாக்கம் பகுதியில் வசிக்கும் இளைய மகன் பாபு கொடுத்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதுமையில் கவனிக்க யாரும் இல்லாதாதால் தம்பதி விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post முதுமையில் கவனிப்பாரின்றி தவித்த தம்பதி விஷம் குடிப்பு மனைவி பலி; கணவனுக்கு சிகிச்சை வந்தவாசி அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: