சதுரகிரியில் ஆக.4ல் ஆடி அமாவாசை திருவிழா: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தாசில்தார் ஆய்வு

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வரும் ஆக.4ல் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தாணிப்பாறையில் தாசில்தார் ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு சித்தர்கள் வழிபட்டு வருவதாக கூறப்படுவதால், இது சித்தர்களின் சொர்க்கபூமி என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் கோயிலுக்கு தினசரி பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சதுரகிரி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆடி அமாவாசை திருவிழா.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். பிரசித்தி பெற்ற இந்த திருவிழா ஆக.4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இத்திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தாணிப்பாறை, வண்டிப்பண்ணை, மாவூத்து உள்ளிட்ட பகுதிகளில் தாசில்தார் சரஸ்வதி தலைமையிலான அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல், கழிவறை வசதி உள்ளிட்ட பக்தர்களுக்கான தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

The post சதுரகிரியில் ஆக.4ல் ஆடி அமாவாசை திருவிழா: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தாசில்தார் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: