அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து கேள்வி கேட்காதீங்க… ஓபிஎஸ்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை: எடப்பாடிபழனிசாமி டென்ஷன்

ஓமலூர்: ‘அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து ஓபிஎஸ்சுக்கும், மற்றவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அம்மா உணவகம் என்பது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எனவே, அங்கு தரமான உணவு வழங்குவதற்கு தரமான பொருட்களை அரசு ஒதுக்க வேண்டும். முழுமையான பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். உதய் திட்டத்தால் தான், மின்கட்டண உயர்வு என்பதை ஏற்க முடியாது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பதை போலீசார் முழுமையாக கண்காணிக்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பு என்று யாரும் குரல் எழுப்பவில்லை. ஊடகங்களில் மட்டுமே இந்த குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எங்கள் கட்சியில் இருந்து விலகிச் சென்றவர் ஓபிஎஸ். அப்படி போனவரை பற்றி, நான் ஏன் கவலைப்பட வேண்டும்?. அவரை இனிமேல் கட்சியில் சேர்க்கவே மாட்டோம் என்று, பலமுறை தெளிவாக கூறிவிட்டேன். இனி ஒருங்கிணைப்பு என்ற கேள்வியை யாரும் கேட்க கூடாது.
இனிமேல் ஒருங்கிணைப்பு குறித்து ஓபிஎஸ்சுக்கும், மற்றவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.

தேர்தல் தோல்வி குறித்து, 23 பாராளுமன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி முடித்துள்ளோம். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, அதிமுக ஆயத்தமாகி வருகிறது. அதற்கான பணிகளை தொடங்கி விட்டோம். துணை முதல்வரை நியமிக்கும் பொறுப்பு, முதல்வருக்கே உள்ளது. எனவே, அது குறித்து முதல்வர் தான் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

The post அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து கேள்வி கேட்காதீங்க… ஓபிஎஸ்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை: எடப்பாடிபழனிசாமி டென்ஷன் appeared first on Dinakaran.

Related Stories: