பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதால் 21ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதால் வரும் 21ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை ேதர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.

எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக வரும் 21ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டம் 21ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய அரசின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 23ம் தேதி மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதால், ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதற்கிடையே ஒன்றிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ வெளியிட்ட பதிவில், ‘ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில், வரும் 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கூட்டத் தொடரில் 2024-25ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் வரும் 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

The post பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதால் 21ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: