ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் மக்கள் பயணம்

 

திருப்பூர், ஜூலை 16 : திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிறுவனங்களுக்கு சரக்குகளை ஏற்றி செல்ல மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சரக்கு வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரக்கு வாகனங்களில் மக்களை அழைத்து செல்லக்கூடாது என்ற விதி உள்ளது.
அதனையும் மீறி சரக்கு வாகனங்களில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு 3 சரக்கு வாகனங்களில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை நுழைவு வாயிலில் காவல்துறையினர் பாதுகாப்பு இருப்பதால் அங்கு சரக்கு வாகனங்களில் வரும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் சரக்கு வாகனங்களில் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லும் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து விடுகின்றனர். ஆபத்தை உணராமல் இதுபோன்ற பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனவும், சரக்கு வாகனங்களில் மக்களை அனுமதிக்கும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் மக்கள் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: