ரூ.4 கோடி கடத்தப்பட்ட விவகாரம் பாஜவின் கேசவ விநாயகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு வரையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக நெல்லையில் பாஜ சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் அவரது ஓட்டல் ஊழியர் சதீஷ் ஆகியோரிடம் தமிழ்நாடு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆஜராகக்கோரி சிபிசிஐடி தரப்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து மேற்கண்ட சிபிசிஐடி நடவடிக்கைக்கு எதிராக கேசவ விநாயக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் கேசவ விநாயகம் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும் என சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு சிபிசிஐடி தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் சபரீஸ் சுப்ரமணியம்,” நான்கு கோடி பணம் ரயில் கடத்தப்பட்ட விவகாரத்தில் விசாரணை என்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு முக்கிய ஹார்ட் டிஸ்க் காணாமல் போய் உள்ளது. அதுதொடர்பாக கேசவ விநாயகத்திடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்பது எங்களது தரப்பு விசாரணைக்கு தடையாக உள்ளது. எனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர் கேசவ விநாயகம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post ரூ.4 கோடி கடத்தப்பட்ட விவகாரம் பாஜவின் கேசவ விநாயகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: