பாம்பு கடித்து விவசாயி பலி மனைவிக்கு அரசு பணி ₹2 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர், ஜூலை 6: ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தால், பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியான விவசாயின் குடும்பத்திற்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் புதுராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த முரளி, தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். ்அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி விவசாயம் செய்து கொண்டிருந்த போது, முரளியை பாம்பு கடித்தது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள கண்ணன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு ஆரம்ப சுகாதர நிலையம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காலதாமதமாக அழைத்து சென்றதால் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, 24 மணி நேரமும் இயங்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தால் தான் தன்னுடைய கணவர் பலியானதாக கூறி, அவரின் மனைவி அருணா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், கண்ணன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடாக ₹10 லட்சம் வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்வி செலவையும் அரசு ஏற்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் மனுதாரரின் கணவர் பலியாகியுள்ளர். எனவே, பலியான முரளியின் மனைவி அருணாவுக்கு சுகாதாரத்துறையில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்க வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுக்காக ₹2 லட்சத்தை அவர்களுடைய வங்கி கணக்கில் 2 வாரத்தில் அரசு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post பாம்பு கடித்து விவசாயி பலி மனைவிக்கு அரசு பணி ₹2 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: