ராமனாக மாறிய பெருமாள்

கும்பகோணம் அருகில் உள்ள சேங்கனூருக்கு அருகில் இருக்கும் சிற்றூர் திருவெள்ளியங்குடி. யமன் பூலோகம் வந்து விஷ்ணுவை நோக்கி தவம் செய்யவே, விஷ்ணு சங்கு, சக்கரத்துடன் காட்சி கொடுத்தார். அதைக் கண்டு பயந்த யமன், ராமபிரானாக காட்சி தர வேண்டும் என திருமாலிடம் வேண்டவே, உடனே திருமால் தன் கையிலிருந்த சங்கு, சக்கரங்களை அருகிலிருந்த கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு அலங்கார நாயகனாக ராமபிரானாக காட்சி கொடுத்தார். அதனால் இவருக்கு கோலவில்லிராமன் என்று பெயர்.

சரஸ்வதிதேவியின் குருவிற்கு ஒரு கோயில்

வேலூருக்கு அருகில் உள்ள வாலாஜாபேட்டையில் கல்வி சிறக்க அருளும் ஹயக்ரீவருக்கு ஒரு கோயில் உள்ளது. மகாவிஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவர், வித்யைக்கு அதிபதியான சரஸ்வதிதேவிக்கு குருவாகப் போற்றப்படுபவர். இவர் இத்தலத்தில் தாயாருக்கு உபதேசம் செய்யும் திருக்கோலம் காணக் கண்கொள்ளாதது; வெகு அபூர்வமானது. ஹயக்ரீவர் வெளிர் பச்சைக்கல் திருமேனியில் காட்சிதருவதும் வெறெங்கும் காணக்கிடைக்காததே.

கந்தசஷ்டி பன்னிரண்டு நாட்கள்

பொதுவாக முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்களே நடக்கும். ஆனால், திருச்செந்தூர் பாலசுப்பிரமணியன் கோயிலில் 12 நாட்கள் நடத்துகின்றனர். முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதமும், சூரசம்ஹாரமும், 7ம்நாளில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த ஐந்து நாட்கள் சுவாமி திருக்கல்யாணக் கோலத்தில் ஊஞ்சல் சேவை என்று கொண்டாடுகிறார்கள். இத்தல மேற்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள ராஜகோபுரம் கந்தசஷ்டி அன்று முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் மட்டுமே திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் திறக்கப்படுவதில்லை.

ராதாகிருஷ்ணன்

 

The post ராமனாக மாறிய பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: