காரைக்கால்- திருவாரூர், தஞ்சை தடத்தில் விரைவில் இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும்

நாகப்பட்டினம்,ஜூலை5: காரைக்கால்-திருவாரூர், தஞ்சை வழி தடத்தில் இரட்டை வழி ரயில் பாதையாக விரைவில் அமைக்க வேண்டும் என்று ரயில்வே ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சந்தித்து எம்பி செல்வராஜ் மனு அளித்தார். நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டில்லியில் சந்தித்து நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேவையான ரயில் சார்ந்த கோரிக்கை மனு அளித்தார்.

திருவாரூர் ரயில் சந்திப்பில் அடிப்படை கட்டமைப்புகள் உள்ளதால் அனைத்து ரயில்களுக்குமான முதன்மை பணிமனை அமைக்க வேண்டும். காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் தடத்தில் இரட்டை வழி பாதையாக விரைவில் அமைக்க வேண்டும். தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் இதுவரை செய்து முடிக்கப்படாத திருவாரூர்- காரைக்குடி தடத்தை விரைந்து மின்மயம் ஆக்க வேண்டும். மேலும் இந்த தடத்தை இரட்டை வழி பாதையாகவும் மாற்றம் செய்ய வேண்டும். திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம் பள்ளி ரயில் பாதையை கோடியக்கரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

மதுரை- புனலூர்- ரயிலை காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். வாரம் மும்முறை இயங்கும் தாம்பரம்- செங்கோட்டை- அதிவேக விரைவு ரயில் தினசரி இயக்க வேண்டும். திருப்பதி- மன்னார்குடி- வாரம் மும்முறை ரயிலை தினசரி இயக்க வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூருக்கு திருவாரூர், தஞ்சாவூர் வழியாக இரவு நேரத்தில் ஒரு விரைவு ரயில் இயக்க வேண்டும். அம்ரித் பாரத் திட்டத்தில் நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி ரயில் நிலையங்களை இணைக்க வேண்டும். அனைத்து ரயில்களுக்கும் கொரடாச்சேரி, கீழ்வேளுர், பேரளம், முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் நின்று செல்ல வேண்டும். பாம்பன் பால வேலைகள் முடிந்த பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி திருவாரூர் வழியாக வட மாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும்.

சென்னையில் இருந்து திருச்சி மார்க்கத்திற்கு மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் வழியாகவும் ரயில்கள் இயக்க வேண்டும். பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வண்ணம் இந்தப் பகுதியில் இருந்து சென்னைக்கும், கோவைக்கும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். திருச்சி திருவாரூர் ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்.

நாகப்பட்டினம் கீரைக்கொல்லை தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ரயில்வே கீழ்பாலம் அமைக்க வேண்டும். நாகப்பட்டினம்- திருக்குவளை- திருத்துறைப்பூண்டி புதிய பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பேரளம்- காரைக்கால் பாதை பணிகள் முடிந்த பிறகு தற்போது திருவாரூர் வழியாக இயங்கும் எந்த ரயிலையும் வழிமாற்றம் செய்யக்கூடாது என தெரிவித்து இருந்தார். மனுவை பெற்ற ஒன்றிய அமைச்சர் முடிந்த வரை ஆவண செய்வதாக கூறினார்.

The post காரைக்கால்- திருவாரூர், தஞ்சை தடத்தில் விரைவில் இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: