வத்தலக்குண்டு பள்ளிகள் முன்பு வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்: பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் பள்ளிகள் முன்பு அகற்றிய வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகாமையில் உள்ள தனியார் பள்ளியின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகளும், மதுரை சாலையில் சர்ச் அருகேயுள்ள தனியார் பள்ளியின் முன்பிருந்த வேகத்தடைகளையும், கடந்த கோடை விழாவின்போது முக்கிய பிரமுகர்கள் கொடைக்கானல் வந்ததையொட்டி அகற்றப்பட்டது.

இந்நிலையில் கோடை விழாவும், கொடைக்கானல் சீசனும் நிறைவு பெற்று, தற்போது பள்ளிகளும் திறந்து மூன்று வார காலத்திற்கு மேலாகி விட்டன. ஆனால் பள்ளிகள் முன்பு அகற்றப்பட்ட வேகத்தடைகள், மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் முன்பு அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “வேகத்தடைகள் அகற்றப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாகும். இப்பகுதிகளில் ஏற்கனவே பலமுறை விபத்துக்கள் நடந்துள்ளது. எனவே இனியும் காலதாமதம் இன்றி பள்ளிகள் முன்பு வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்’’ என்றனர்.

The post வத்தலக்குண்டு பள்ளிகள் முன்பு வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்: பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: