தேசிய மின்சார பாதுகாப்பு வாரத்தையொட்டி பள்ளி மாணவர்களிடையே அதிகாரிகள் விழிப்புணர்வு

சென்னை: தேசிய மின்சார பாதுகாப்பு வாரத்தையொட்டி பள்ளி மாணவர்களிடையே மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் கீழ் இயங்கும் மின் ஆய்வுத்துறை 2024 ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை தேசிய மின்சார பாதுகாப்பு வார பிரசாரத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுகிறது. அந்தவகையில், இந்தாண்டு கருப்பொருளான, ”பள்ளியிலிருந்து பாதுகாப்பு தொடங்குகிறது” என்கிற மைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு மின்சார பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு, அதன் முக்கியத்துவத்தை மின்வாரிய அதிகாரிகள் விளக்கி வருகின்றனர்.

இதுகுறித்து, அரசு தலைமை மின் ஆய்வாளர் ஜோசப் ஆரோக்கியதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு கோட்ட மின் ஆய்வாளர்கள் மூலம் பாதுகாப்பாக மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுதவிர, வீடு, பள்ளி மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பான மின்சார பயன்பாட்டிற்கு பங்களிக்க இளைய தலைமுறையினருக்கு உரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதன்படி, பள்ளி மாணவர்களிடையே மின்சார சாதனங்களை ஒருபோதும் ஈரமான கைகளுடன் அல்லது தண்ணீருக்கு அருகில் பயன்படுத்த வேண்டாம், மின் கம்பங்கள் மீதோ, மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களின் மீதோ ஏற வேண்டாம், மின்சார எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் உள்ள அமைப்புகள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், கம்பி வேலிகள் மற்றும் மின் பெட்டிகளை தொட வேண்டாம், மின் கம்பிகளுக்கு அருகில் பட்டங்களை பறக்க விட வேண்டாம், மின்சார அபாயங்கள் பற்றிய எச்சரிக்கை அறிகுறிகளுக்கு கீழ்ப்படியுங்கள் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி வருகின்றோம்.

மேலும், இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மின்சார பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள், தகவல் கையேடுகள் மற்றும் மின் பாதுகாப்பு குறிப்புகள் அடங்கிய பிரசுரங்களை வழங்குகிறோம். மின்சாரம் பற்றிய அடிப்படை கருத்துகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், சாத்தியமான ஆபத்துகளை அடையாளம் காண உதவுவதற்கும், மின்சார விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் கருத்தரங்குகள் மற்றும் விளக்கக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்கள் மின் பாதுகாப்பு குறித்தான உறுதிமொழியையும் எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேசிய மின்சார பாதுகாப்பு வாரத்தையொட்டி பள்ளி மாணவர்களிடையே அதிகாரிகள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: