போலீஸ் கணவன் விஷம் குடித்து தற்கொலை கர்ப்பிணி மனைவியும் தூக்கிட்டு சாவு

கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார். சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திவ்யபாரதி (23). நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளான். தற்போது திவ்யபாரதி 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 55 நாட்களுக்கும் மேலாக விடுப்பில் இருந்து வந்த காவலர் அஜித்குமார் கடந்த 28ம் தேதி கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் தற்கொலை செய்து கொண்டதால் திவ்யபாரதி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் திவ்யபாரதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாயார் பாக்யலட்சுமி மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சொரகொளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், திவ்யபாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கலசபாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலீஸ் கணவன் விஷம் குடித்து தற்கொலை கர்ப்பிணி மனைவியும் தூக்கிட்டு சாவு appeared first on Dinakaran.

Related Stories: