கனியாமூர் பள்ளி கலவர வழக்கு ஸ்ரீமதியின் தாய் ஆஜராகவில்லை: விசிக நிர்வாகியிடம் 1 மணி நேரம் விசாரணை

கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அனுப்பிய சம்மனுக்கு மாணவி ஸ்ரீமதியின் தாய் ஆஜராகவில்லை. கடலூர் விசிக நிர்வாகியிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி 2022 ஜூலை 13ம்தேதி மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து நடந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது.

இதனால் அந்த பள்ளி சூறையாடப்பட்டு பள்ளி வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதுபற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட விசிக மாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோரை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து இருவரையும் கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் கடலூர் விசிக மாவட்ட செயலாளர் திராவிடமணி நேற்று கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் டிஎஸ்பி அம்மாதுரை தலைமையிலான போலீசார் ஒரு மணி நேரம் விசாரித்தனர். மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி நேற்று ஆஜராகவில்லை. விரைவில் வழக்கறிஞருடன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கனியாமூர் பள்ளி கலவர வழக்கு ஸ்ரீமதியின் தாய் ஆஜராகவில்லை: விசிக நிர்வாகியிடம் 1 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: