ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரிப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

கோவை: தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.  கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பால்வளத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

கடந்த காலங்களில் ஆவின் பால் கொள்முதலில் தொய்வுநிலை மாறி தற்போது மிகப்பெரிய அளவில் ஒன்றியங்களில் மட்டும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன் பால் கையாளும் திறனை 70 லட்சம் லிட்டராக உயர்த்தவும் கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. நெய் போன்ற பொருட்கள் நீண்ட நாட்கள் தாங்கக்கூடிய வகையில் புதிய வியூகங்களை வகுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* கிளைகள் தொடங்க விண்ணப்பம் வரவேற்பு
அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டியில்,‘‘அமுல் நிறுவனம் விவாதத்திற்கான பொருளே கிடையாது. ஆவின் தயாரிப்புக்கு மக்கள் வரவேற்பு உள்ளது. ஆவின் நிறுவனம் முடிந்ததாக சிலர் சொன்ன நிலையில் தற்போது 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் எப்படி செய்ய முடிந்தது?. மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதவர்கள், திருநங்கைகளுக்கு ஆவின் கடை நடத்த அனுமதி கொடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் ஆவின் நிர்வாகத்தின் கிளைகள் அதிகரிக்க தேவை உள்ளது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’’ என்று தெரிவித்தார்.

The post ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரிப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: