மேற்கு தொடர்ச்சி மலையின் வளமைக்கும், பாதுகாப்பிற்கும் பருவமழை அவசியம்

*தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பேச்சு

ஊட்டி : தென்மேற்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மலையின் வளமைக்கும் மழை காடுகளின் பாதுகாப்பிற்கும் மிக அவசியமாக உள்ளது என தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் விஸ்வநாதன் பேசினார். ஊட்டி அருகேயுள்ள எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நேற்று தேசிய பசுமை படை சர்வதேச மழைக்காடுகள் தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் தலைமை வகித்தார்.

தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் விஸ்வநாதன் பேசுகையில், மழைக்காடுகள் தினம் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 22ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்கள் மழைக்காடுகள் பூமியில் நிலை நிறுத்த வேண்டிய அவசியம் குறித்து அறிந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், என்றார்.
தொடர்ந்து, நீலகிரி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், பூமியின் நிலப்பரப்பில் 6 சதவீதம் மட்டுமே மழைக்காடுகள் உள்ளது. இது பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. உலகின் பாதி அளவு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்வதற்கான பகுதியாக உள்ளது. இந்தியாவின் அமைதி பள்ளத்தாக்கு 34.52 சதுர கிமீ., பகுதி கேரளாவில் மன்னார்காடு பகுதியில் உள்ளது.

இதனை வளமையாக நிலை நிறுத்த நிலம்பூர் காடுகளும் தென்னிந்தியாவின் 5வது மிக உயரமான மலைத்தொடர் முக்குறுத்தியும் இதற்கு பாதுகாவலாக உள்ளது என்றார்.
தென்மேற்கு பருவமழை சிறப்பாக இருந்தால் அமைதி பள்ளத்தாக்கு அமைதியாக நிலைத்திருக்கும். இந்த பிராந்தியத்தில் முக்கூருத்தி அமைதி பள்ளத்தாக்கில் பல அழிந்து வரும் தாவர இனங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்புடன் இருக்க தென் மேற்கு பருவமழை மிக அவசியமாக உள்ளது. குறிப்பாக நீலகிரி வரையாடு முக்கூருத்தி பாதுகாப்பு பகுதியிலும் பாதுகாக்கப்படுகிறது.

அமைதி பள்ளத்தாக்கில் திருவாங்கூர் ஆமைகள், இந்திய ஹாண்ட் பில் சிங்கவால் குரங்கு, ராஜநாகம், போன்ற அழிவின் பட்டியில் இருக்கும் உயிரினங்கள் பாதுகாக்கப்படுகிறது. மழை காடுகள் அவசியம் மேலும் வற்றாத ஆறுகள் பவானி, குந்திபுழா, காவேரி, கடலுண்டி மேற்கு தொடர்ச்சி மலை வளத்தை பொறுத்தே உள்ளது என்பது தர்சனமாகும். தென்மேற்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மலையின் வளமைக்கும் மழை காடுகளின் பாதுகாப்பிற்கும் மிக அவசியமாக உள்ளது.

இந்தப் பகுதியில் வன சுரண்டல்கள் மற்றும் பல காரணங்கள் அதிக அழுத்தம் தருவதால் பாதுகாப்பு கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்றார். ஆசிரியர் கங்காதரராஜ், இயற்க்கைக்கு செய்யும் நன்றி கடன் உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையில் மாணவ சமுதாயம் முன் வர வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை தேசிய பசுமை படை செய்திருந்தது.

The post மேற்கு தொடர்ச்சி மலையின் வளமைக்கும், பாதுகாப்பிற்கும் பருவமழை அவசியம் appeared first on Dinakaran.

Related Stories: