பெரம்பலூர் அருகே விபத்து ஆம்னி பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி

*8 பேர் படுகாயம்

பாடாலூர் : பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். இதில் பயணம் செய்த 8 பேர் படுகாயமடைந்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து சென்னைக்கு நேற்றுமுன்தினம் இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை வாவரை பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மகன் அமர்நாத் (36) ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது பாடாலூர் தனியார் பள்ளி அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பால பணிக்காக சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா மருதங்கோட்டையை சேர்ந்த ரத்தினன் மகன் அஜின் மோன் (23) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் விபத்தில் காயமடைந்த 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான அஜின்மோன் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பெரம்பலூர் அருகே விபத்து ஆம்னி பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: