சத்தியமங்கலத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

சத்தியமங்கலம், ஜூன் 27: ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் சத்தியமங்கலத்தில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஈரோடு ஏடிஎஸ்பி ராஜா ரணவீரன் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக எழுதி காவல்துறை அதிகாரிகளிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரிகள் ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி மக்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறை சார்பில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சத்தியமங்கலம் லிட்டில் பிளவர் பள்ளி முன்பு தொடங்கிய பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி பேரணியாக புறப்பட்டு திப்பு சுல்தான் சாலை வழியாக வடக்குப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் ஈரோடு ஏடிஎஸ்பி ராஜா ரணவீரன், சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

The post சத்தியமங்கலத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: