முன்ஜாமீன் மனு தள்ளுபடி; அதிமுக மாஜி அமைச்சரை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்: திண்டுக்கல்லா? வடமாநிலமா? விரைந்தது தனிப்படை

கரூர்: முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருவதால் தனிப்படை திண்டுக்கல் மற்றும் வட மாநிலம் விரைந்துள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப் பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதேபோல, கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதரும் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்ஜாமீன் கோரி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 12ம்தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 12 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வரும் விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் காஷ்மீரில் பதுங்கி இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பக்கத்து மாவட்டமான திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகி ஒருவரின் பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

எனவே தனிப்படை போலீசார் திண்டுக்கல்லுக்கு விரைந்துள்ளனர். அதேபோல் இன்னொரு குழுவினர், வடமாநிலங்களில் முகாமிட்டு இருக்கலாம் என தேடி அங்கு சென்றுள்ளனர். இதனிடையே இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

The post முன்ஜாமீன் மனு தள்ளுபடி; அதிமுக மாஜி அமைச்சரை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்: திண்டுக்கல்லா? வடமாநிலமா? விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.

Related Stories: