போதைக்கு அடிமையானால் அழகான எதிர்காலத்தை இழந்து விடுவீர்கள்

*மாணவர்களுக்கு நாகை எஸ்பி எச்சரிக்கை

நாகப்பட்டினம் : போதைக்கு அடிமையாகினால் அழகான வாழ்க்கையும், எதிர்காலத்தையும் இழந்து விடுவீர்கள் என்று மாணவர்களுக்கு நாகை எஸ்பி ஹர்ஷ்சிங் அறிவுறுத்தினார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் இன்று (நேற்று) கடைபிடிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் எடுத்துரைக்கும் வகையில் காவல்துறையினர் அனைத்து மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்வார்கள். இதற்கு முன்னோட்டமாக நேற்று நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்யப்படுகிறது. தயவுசெய்து மாணவர்கள் யாரும் போதை பொருட்களை பயன்படுத்தாதீர்கள்.

உங்களை அறியாமல் ஒருமுறை நீங்கள் போதை பொருளை பயன்படுத்தினால் திரும்ப திரும்ப பயன்படுத்த தோணும், அதன்பின்னர் நீங்கள் போதைக்கு அடிமையாகி உங்களது அழகான எதிர்காலத்தையும், வாழ்க்கையை இழந்து விடுவீர்கள். எனவே விளையாட்டாக கூட போதை பொருளை பயன்படுத்த கூடாது. போதை பொருள் விற்பது குறித்த தகவல் கிடைத்தால் தயக்கம் இன்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். போதை பொருள் பழக்கத்துக்கு எதிராக நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் போதை பொருட்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் போதை பொருள் விழிப்புணர்வு சரியான முறையில் சென்று அடையவில்லை. இதனால் போதை பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமை குறித்த யாரும் முழுமையாக அறியமுடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். போதை பழக்கத்தால் சமுதாயத்தில் மரியாதை குறையும். தங்கள் வாழ்க்கை சீர்கெடும். முதலில் பள்ளி மாணவ, மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டும்.

இதை உணர்ந்து ஒவ்வொரு மாணவர்களும் தங்களை சுற்றி உள்ளவர்களிடம் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த மாணவர்கள் தன்எழுச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை எஸ்பி ஹர்ஷ்சிங் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதை தொடர்ந்து போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

The post போதைக்கு அடிமையானால் அழகான எதிர்காலத்தை இழந்து விடுவீர்கள் appeared first on Dinakaran.

Related Stories: