விஷ சாராயம் அருந்தி உயிரிழப்பு எதிரொலி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை

*2,864 லிட்டர் சாராயம் பறிமுதல்-59 பேர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 58 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் அதிரடியாக மதுவிலக்கு சோதனையில் ஈடுபட வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜத்சதுர்வேதி உத்தரவிட்டார். கல்வராயன்மலை மற்றும் மாவட்டம் முழுவதும் 5 காவல் ஆய்வாளர்கள், 7 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட 15க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து மதுவிலக்கு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் எஸ்.பி. உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 2 நாட்களில் தனிப்படையினர் நடத்திய அதிரடி மதுவிலக்கு சோதனையில் கல்வயராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் 500 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 பேரல்களில் சுமார் 1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 59 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1,864 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 139 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

இதில் 18 பெண்கள் உள்பட 59 பேர் மீதும் அந்தந்த காவல்நிலையத்தில் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post விஷ சாராயம் அருந்தி உயிரிழப்பு எதிரொலி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: