சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 32 வழக்குகளில் தொடர்புடைய 39 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 32 வழக்குகளில் தொடர்புடைய 39 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 65 கிராம் தங்க நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள், 7 செல்போன்கள், பணம் ரூ.72,71,521/-, 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சென்னை பெருநகரில் செயின் பறிப்பு, வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய (DACO – Drive Against Crime Offendors) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, செயின்பறிப்பு, வாகனங்கள் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 13.06.2024 முதல் 19.06.2024 வரையிலான 7 நாட்களில் செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பான 26 வழக்குகளில் தொடர்புடைய 6 இளஞ்சிறார்கள் உட்பட 34 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 65 கிராம் தங்க நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள், 7 செல்போன்கள், பணம் ரூ.72,71,521/-, ரூ.2 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் மற்றும் 2 கார் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கடந்த 7 நாட்களில் மோட்டார் வாகன திருட்டு தொடர்பான 6 வழக்குகளில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 19.06.2024 வரை, திருட்டு, சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி குற்றங்களில் கைது செய்யப்பட்ட 118 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு, தங்கச்சங்கிலி பறிப்பு மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

The post சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 32 வழக்குகளில் தொடர்புடைய 39 குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: