ஆம்பூர் அருகே சோமலாபுரத்தில் பாலாற்றில் பொங்கும் நுரையுடன் துர்நாற்றம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே சோமலாபுரத்தில் பாலாற்றில் பொங்கும் நுரையுடன் துர்நாற்றம் வீசும் நிலையில் தோல் கழிவுநீர் கலந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் பல பெரிய தொழிற்சாலைகள் தங்களுக்கென்று சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்கின்றன. சிறிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள், ஆம்பூர் அடுத்த பெரியவரிக்கம் மற்றும் ஆம்பூர் மளிகைதோப்பு ஆகிய இடங்களில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தங்களது கழிவுநீரைஅனுப்பி சுத்திகரிப்பு செய்கின்றன.

ஆனால், ஒரு சில தனியார் நிறுவனங்கள் முறைகேடாக அவ்வப்போது இந்த கழிவு நீரை பாலாற்றில் விடுவதாக கூறப்படுகிறது. அதேபோல் இன்று காலையும் பாலாற்றில் அதிகளவு கழிவுநீர் நுரையுடன் வெளியேற்றப்பட்டிருந்தது. இதனால் பாலற்றில் துர்நாற்றத்துடனும் பொங்கும் நுரையுடனும் கழிவுநீர் கலப்பதாகவும் ஆம்பூர் அடுத்த சோமலாபுர கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் கால்நடைகள் தண்ணீர் அருந்தவும் இயலாத நிலையில் ஆற்றுநீராக மாறிவிட்டது. விவசாயம் மற்றும் இதர பயன்பாட்டிற்கான நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆம்பூர் அருகே சோமலாபுரத்தில் பாலாற்றில் பொங்கும் நுரையுடன் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: