போலி டீ தூள் விற்ற 5 பேர் மீது வழக்கு 80 கிலோ பறிமுதல் ஆரணியில் உள்ள கடைகளில்

ஆரணி, ஜூன் 8: ஆரணியில் உள்ள கடைகளில் போலி டீ தூள் விற்ற 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ள சில கடைகளில் பிரபல டீ தூள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, போலி டீ தூள் விற்பனை செய்து வருவதாக, அந்த நிறுவனத்தின் சென்னை சீனியர் மேலாளர் மணிமாறன் என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆரணியில் உள்ள ஜெனரல் ஸ்டோர், டிரேடர்ஸ் மற்றும் மளிகை கடைகளில் நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்கள், தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி டீ தூள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, பல்வேறு கடைகளில் போலி டீ தூள் பாக்கெட்களை ஓட்டல், டீக்கடை மற்றும் பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 80 கிலோ போலி டீ தூள் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நிறுவனத்தின் சீனியர் மேலாளர் மணிமாறன் ஆரணி டவுன் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 5 கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலி டீ தூள் விற்ற 5 பேர் மீது வழக்கு 80 கிலோ பறிமுதல் ஆரணியில் உள்ள கடைகளில் appeared first on Dinakaran.

Related Stories: