திருமணம் நிச்சயித்த பெண் மின்னல் தாக்கி பலி செய்யாறு அருகே சோகம்

செய்யாறு, ஜூன் 7: செய்யாறு அருகே மின்னல் தாக்கியதில் திருமணம் நிச்சயித்த பெண் பரிதாபமாக பலியானார். இன்னும் ஒருவாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், அவர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, பாப்பாந்தாங்கல் கிராமம், குண்ணத்தூர் சாலையில் உள்ள கேகே நகரை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகள் மோனிஷா(20), டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், மோனிஷா வீட்டின் வெளியே காய வைத்திருந்த துணிகள் மற்றும் பாத்திரங்களை எடுப்பதற்காக வெளியே வந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் மோனிஷா சுருண்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், மோனிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகின்றனர். இறந்த மோனிஷாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்னும் ஒருவாரத்தில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில், அவர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post திருமணம் நிச்சயித்த பெண் மின்னல் தாக்கி பலி செய்யாறு அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: