சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு காதலிப்பதாக தொடர்ந்து தொல்லை கொடுத்து

திருவண்ணாமலை, ஜூன் 7: திருவண்ணாமலை அருகே 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்(27), விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். மேலும், கடந்த 21.10.2020 அன்று அந்த சிறுமியை மிரட்டி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என அச்சுறுத்தி அனுப்பியுள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு துடித்துள்ளார். எனவே, சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதித்திருப்பது தெரியவந்தது. பின்னர் நடந்த சம்பவம் குறித்து சிறுமி கண்ணீருடன் தெரிவித்ததால், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து, மங்கலம் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சதீஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சதீசுக்கு, வாழ்நாள் முழுவதும் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வாலிபர் சதீஷை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு காதலிப்பதாக தொடர்ந்து தொல்லை கொடுத்து appeared first on Dinakaran.

Related Stories: