அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

திருவாடானை, ஜூன் 3: திருவாடானை அருகே கல்லூர் பகுதியில் பல ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், கல்லூர் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் MGNREGS திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கியது.

இதற்காக கடந்த ஆண்டு பில்லர் அமைக்க குழிகள் தோண்டப்பட்ட நிலையில், பின்னர் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பள்ளி வளாகத்தைச் சுற்றி தோண்டப்பட்ட பில்லர் குழிகளில் மழைநீர் நிரம்பி குளமாகியது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் நடந்து செல்லும்போது பில்லர் குழியில் தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது. இதனால் ஊராட்சி நிர்வாகம் அந்த குழிகளை மூடியது. ஆனால் அதன்பிறகு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: