வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

 

திருச்சுழி, மே 31: திருச்சுழி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியின் போது விவசாயியை தாக்கி மண்டை உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சுழி அருகே அம்மன்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் காளியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது அம்மன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி உக்கிரபாண்டி(50) என்பவரை அதே ஊரை சேர்ந்த பாண்டி, முக்கூர் மருதுபாண்டி, பஞ்சவர்ணம், அம்மன்பட்டி மங்கடா மருது ஆகியோர் பயங்கர ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் உக்கிரபாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் வந்ததும் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உக்கிரபாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து உக்கிரபாண்டி கூறுகையில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறினோம். அதையும் மீறி அனுமதி வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி ஏற்கனவே அரசியல் முன்விரோதம் காரணமாக அம்மன்பட்டியை சேர்ந்தவர்கள் என்னை ஆயுதத்தால் தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: