அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நாட்டின் முதல் தனியார் ராக்கெட் அக்னிபான்- ஐ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சென்னையை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி ஸ்டார்ட் அப் நிறுவனம் அக்னிகுல் காஸ்மோஸ், சென்னை ஐஐடியுடன் இணைந்து சிறிய ரக ராக்கெட் ஏவுதல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த, 2017ம் ஆண்டு சென்னை ஐஐடியை சேர்ந்த இரண்டு இன்ஜினியர்களால் துவங்கப்பட்ட அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் இந்தியாவிலேயே முதல் முறையாக சிங்கில் பீஸ் 3டி பிரின்டட் செமி கிரியோஜெனிக் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 7.15 மணிக்கு அக்னிபான் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த செயல்முறையை மேற்பார்வையிட்டார்.

இது உள்நாட்டு உற்பத்தியில் தயாரான 3டி பிரின்டட் செமி கிரியோஜெனிக் என்ஜின் அடிப்படையிலான ராக்கெட் ஆகும். பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக இந்த ராக்கெட் ஏவுதல் திட்டம் நான்கு முறை கைவிடப்பட்ட நிலையில், 5வது முறையாக வெற்றிகரமாக சோதனை நடந்தது. இரண்டு அடுக்கு ஏவுதல் திறன் கொண்ட இந்த ராக்கெட் 300 கிலோ எடையும் 700 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கக் கூடிய திறன் கொண்டது. திரவ மற்றும் வாயு எரிபொருளை கொண்டு செமி கிரியோஜெனிக் என்ஜின் மூலம் இந்த ராக்கெட் இயங்குகிறது.

The post அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: