தந்தை, மகள் உள்பட 3 பேர் குட்டையில் மூழ்கி பலி: சூலூர் அருகே பரிதாபம்

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (44). கோயில் பூசாரி. இவரது மகள் தமிழ்ச்செல்வி (15). பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறையை தொடர்ந்து மணிகண்டனின் அண்ணன் மகள் புவனா (13) போகம்பட்டிக்கு வந்திருந்தார். மணிகண்டன், தமிழ்ச்செல்வி, புவனா ஆகிய 3 பேரும் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள குட்டையில் நீச்சல் பழகுவதற்காக சென்றனர். மணிகண்டன் கரையில் நின்றிருந்தார். சிறுமிகள் இருவரும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

அதை பார்த்த மணிகண்டன் அவர்களை காப்பாற்றுவதற்காக குட்டையில் குதித்தார். அப்போது அவரும் உள்ளே சிக்கிக்கொண்டார். இதனிடையே குட்டைக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்களை தேடி மணிகண்டனின் மனைவி குட்டை பகுதிக்கு வந்து பார்த்தார். அப்போது குட்டையின் கரையில் குழந்தைகளின் செருப்புகள் மட்டுமே கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அளித்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் வந்து குட்டையில் இறங்கி ஆழமான பகுதியில் தேடினர். அப்போது மணிகண்டன், தமிழ்ச்செல்வி, புவனா ஆகியோரது உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

The post தந்தை, மகள் உள்பட 3 பேர் குட்டையில் மூழ்கி பலி: சூலூர் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: