திண்டுக்கல்லில் கனமழை 2 மாடி வீட்டின் முன்பகுதி இடிந்தது

திண்டுக்கல். மே 21: திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக சுமார் 75 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடி வீட்டின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பிச்சை முகைதீன் சந்தில் சுமார் 75 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடி குடியிருப்பு உள்ளது.

இந்த குடியிருப்பில் தரைதளத்தில் வீட்டிற்கு சொந்தக்காரரான கண்ணன் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், முதல் தளத்தில் மற்றொரு குடும்பத்தினர் வாடகைக்கும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, பழமையான கட்டிடத்தில் முன் பகுதி தண்ணீரில் ஊறி சேதம் அடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று பிற்பகல் நேரத்தில் வீட்டின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தின் போது அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிட பாகங்களை அப்புறப்படுத்தும் பணியில் வீட்டின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் நகர் பகுதியில் திடீரென வீடு இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திண்டுக்கல்லில் கனமழை 2 மாடி வீட்டின் முன்பகுதி இடிந்தது appeared first on Dinakaran.

Related Stories: