இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி; ராகுல்காந்தியுடன் நேருக்கு நேர் விவாதிக்க மோடி அஞ்சுகிறார்: செல்வப்பெருந்தகை விமர்சனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிலையில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அத்தகைய விவாதத்தை நடத்துவதற்கு நரேந்திர மோடிக்கு துணிவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மடியில் கனம் இருப்பதால் ராகுல்காந்தியுடன் விவாதிக்க நரேந்திர மோடி தயாராக இல்லை. நரேந்திர மோடியை பொறுத்தவரை முதல்வராக இருந்த 11 ஆண்டு காலத்தில் சட்டமன்றத்திலோ, பிரதமராக பதவி வகித்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்றத்திலோ எத்தகைய விவாதங்களிலும் அவர் பங்கேற்று கருத்து மோதல்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டதில்லை.

பிரதமர் மோடி பேசுவார், அதனை மற்ற உறுப்பினர்கள் கேட்க வேண்டும். எந்த கேள்விக்கும் நாடாளுமன்றத்தில் அவர் பதில் சொல்லியதில்லை. பிரதமர் பதவி வகித்த 10 ஆண்டு காலத்தில் ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. ஏனெனில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிற துணிவை அவர் பெற்றிருக்கவில்லை. அதற்கு காரணம் அவரது அரசியல் பின்னணி தான். இந்நிலையில் இருக்கும் நரேந்திர மோடி நாள்தோறும் ராகுல்காந்தியை இளவரசர் என்று திரும்பத் திரும்ப குறிப்பிட்டு பேசுகிறார். இந்தியாவில் மன்னராட்சியை ஒழித்த இந்திரா காந்தியின் பேரப் பிள்ளையாக இருக்கிற ராகுல்காந்தியை பார்த்து இளவரசர் என்று மோடி அழைப்பது மிகுந்த கேலிக்குரியது. புல்வாமா தாக்குதலை பயன்படுத்தி 2019 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடியதை போல, 2024 தேர்தலில் ராமர் கோயில் பிரச்சினையை எழுப்பி, மக்களை திசைத் திருப்பி விடலாம் என்று மோடி கனவு காண்கிறார்.

மேலும், பாஜவினரும், பிரதமர் மோடியும் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அச்சுறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்கிற கனவை நாளுக்கு நாள் ராகுல்காந்தி தகர்த்து வருகிறார். இதன்மூலம் தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பின்னணியில் தான் ராகுல்காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின்வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி; ராகுல்காந்தியுடன் நேருக்கு நேர் விவாதிக்க மோடி அஞ்சுகிறார்: செல்வப்பெருந்தகை விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: