வாக்குச்சீட்டிற்கு பணம் பெறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை ஆந்திராவில் 3.03 லட்சம் பேர் தபால் வாக்கை பதிவு செய்துள்ளனர்

*மாநில தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

திருமலை : ஆந்திராவில் 3.03 லட்சம் பேர் தபால் வாக்கை பதிவு செய்துள்ளனர் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தபால் வாக்குச் சீட்டுக்கு அரசு ஊழியர்கள் 4.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் இதுவரை 3.03 லட்சம் பேர் தபால் வாக்குச் சீட்டு மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். சில மாவட்டங்களில் கடந்த 3ஆம் தேதியும், சில மாவட்டங்களில் 4ஆம் தேதியும் வீட்டில் இருந்து வாக்களிப்பு மற்றும் தபால் வாக்கு பதிவு தொடங்கியது.

சில இடங்களில் தபால் வாக்களிப்பு மையத்தில் ஏற்பாடுகள் தொடர்பான சில பிரச்னைகள் எழுந்தவுடனேயே தீர்க்கப்பட்டது. கடந்த 5ம் தேதி விஜயநகரம் மாவட்டத்தில் நானே நேரில் சென்று தபால் ஓட்டு பதிவு செய்யும் மையத்தை ஆய்வு செய்தேன். ஆனால், பல்வேறு காரணங்களால் சில ஊழியர்கள் தபால் வாக்கு சீட்டு வசதியை பயன்படுத்தாததால், அந்தந்த பகுதியில் உள்ள மையத்தில் வாக்கு சீட்டு பயன்படுத்த இன்றும், நாளையும் (நேற்றும், இன்றும்) கால அவகாசம் வழங்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பணியாளருக்கு ஆர்.வி.ஒ. வின் அதிகார வரம்பில் வாக்குகள் உள்ளது. ஆனால் இன்றும் இது தொடர்பில் சில பிரச்சினைகள் எழுவதாக தமது கவனத்திற்கு வந்துள்ளது. இதுவரை தபால் வாக்குச் சீட்டு வசதியைப் பயன்படுத்தாத ஊழியர்கள் கவலையடைய வேண்டாம். எனவே நாளையும் (இன்றும் ) அரசு ஊழியர் வாக்களிக்கும் வசதி அந்தந்த மையத்தில் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் உரிமையை ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

தபால் வாக்குகளை பயன்படுத்த யாரும், யாருக்கும் அழுத்தம் கொடுக்க கூடாது அவ்வாறு இருந்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார். தபால் ஓட்டு விஷயத்தில், லஞ்சம் கொடுப்பவர்கள் மட்டுமின்றி, லஞ்சம் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் ஊழியர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். எந்தவொரு சபலத்திலும் விழ வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த இரண்டு நாட்களாக தபால் வாக்குச் சீட்டு வசதியைப் பயன்படுத்தும் ஊழியர்களிடம் இருந்து பல விமர்சனங்கள் வருகின்றன. சில ஊழியர்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி பணம் வாங்கிக்கொள்வதாக தகவல் கிடைக்கிறது. அரசு ஊழியர்கள் இதுபோன்ற ஆசைகளுக்கு அடிபணிவது மோசமான செயலாகும். இது தொடர்பாக மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகுடேத்தில் பணம் விநியோகம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

அனந்தபூரில் கான்ஸ்டபிள் ஒருவர் தபால் ஓட்டு பதிவு செய்யும் ஊழியர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு பணம் விநியோகம் செய்ததை கையும் களவுமாக பிடிபட்டு அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விசாகப்பட்டினம் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வாக்கு பதிவு மையம் அருகே 2 பேர் பணத்துடன் நடமாடியதைக் கண்டறிந்து, பணத்தைக் கைப்பற்றி அவர்களை கைது செய்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓங்கோலில் சிலர் யூ.பி.ஐ மூலம் சில ஊழியர்களுக்கு பணம் அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக்கொண்டு விரிவான விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கால் டேட்டா மற்றும் வங்கி பரிவர்த்தனை மூலம் சுமார் எட்டு முதல் பத்து பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேபோன்று பல வி.வி.ஐ.பி.க்கள் தேர்தல் பரப்புரை செய்ய மாநிலத்திற்கு வருகை தரவுள்ள பின்னணியில் வி.வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பில் உள்ள போலீசாருக்கு 9 ம் தேதி வாக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

The post வாக்குச்சீட்டிற்கு பணம் பெறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை ஆந்திராவில் 3.03 லட்சம் பேர் தபால் வாக்கை பதிவு செய்துள்ளனர் appeared first on Dinakaran.

Related Stories: