டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்படுகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 23ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 70 இடங்களுக்கு 699 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

இதனால் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட தேசியத் தலைவர்கள் பலர் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் டெல்லியில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லியில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

இவர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தேர்தலை சுமூகமாக நடத்த 220 கம்பெனி துணை ராணுவப் படை வீரர்களும், 19,000 ஊர்காவல் படையினரும், டெல்லி போலீசார் 35,626 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி பேரவைத் தேர்தலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி ஆகியோர் வாக்களித்தனர்.

அதேபோல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, ெடல்லி காவல் துறை ஆணையர் சஞ்சய் அரோரா, டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர்.ஆலிஸ் வாஸ், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அவரது மனைவி சங்கீதா சக்சேனா ஆகியோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆம் ஆத்மி கட்சியின் கைலாஷ் தொகுதி வேட்பாளர் சவுரப் பரத்வாஜ், பாஜகவின் கரவால் நகர் வேட்பாளர் கபில் மிஸ்ரா, காங்கிரஸின் புதுடெல்லி வேட்பாளர் சந்தீப் தீக்‌ஷித் மற்றும் கல்காஜி வேட்பாளர் அல்கா லம்பா ஆகியோரும் தங்களது தொகுதிகளில் வாக்களித்தனர். பனிப்பொழிவால் காலையில் வாக்குப் பதிவு மந்தமாகக் காணப்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

முன்னதாக பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள், டெல்லி மக்களை வாக்களிக்க வருமாறும், தங்களது கடமையை ஆற்றுமாறும் வேண்டுகோள் விடுத்து பதிவை வெளியிட்டனர். டெல்லி பேரவை தேர்தல் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில், பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். டெல்லியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது appeared first on Dinakaran.

Related Stories: