சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் குண்டு பாய்ந்து இளம்பெண் பலி: 4 வயது சிறுவன் ட்ரிகரை அழுத்தியதால் விபரீதம்; அசட்டையாக வைத்திருந்த அண்ணன்கள் கைது

சங்ககிரி: சங்ககிரி அருகே, கழுகை விரட்டுவதற்காக வைத்திருந்த ஏர்கன்னில் இருந்து வெளியேறிய குண்டு பாய்ந்ததில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஏர்கன் வைத்திருந்த அண்ணன்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே கட்டயகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (35). கார் டிரைவர். இவரது மனைவி தமிழரசி (30). இவர்களுக்கு 10 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன், தமிழரசி தனது கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு, குழந்தைகளுடன் சேலம் மாவட்டம் சங்ககிரி பாப்பாங்காட்டில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் (21ம் தேதி), தமிழரசியின் அண்ணன் சரத்குமாரும், அவரது பெரியப்பா மகன் சதீஷ்குமாரும், வீட்டின் அருகேயுள்ள பகவதி அம்மன் கோயில் முன்புள்ள மரத்தில், கோழி குஞ்சை தூக்க வரும் கழுகை விரட்டுவதற்காக, ஏர்கன் துப்பாக்கியில் குண்டை போட்டு நிரப்பி, மரத்திற்கு கீழ் உள்ள திண்ணையில் வைத்திருந்தனர். அப்போது, அங்கிருந்த சரத்குமாரின் 4 வயது மகன், அந்த துப்பாக்கியின் ட்ரிகரை தெரியாமல் அழுத்தி விட்டான். அதிலிருந்து வெளியேறிய குண்டு, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த தமிழரசியின் வயிற்றில் பாய்ந்து படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி சரிந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தமிழரசியின் கணவன் முருகன், சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, எஸ்ஐ கருணாகரன் ஆகியோர், ஏர்கன் துப்பாக்கியில் குண்டை போட்டு டிரிக்கரை அழுத்தினால், அதிலிருந்து குண்டு வெளியேறி, யார் மீதாவது பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை தெரிந்தே, மரத்தின் கீழ் ஏர்கன் வைத்திருந்த குற்றத்திற்காக சரத்குமார் (34), சதீஷ்குமார் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரையும், சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் குண்டு பாய்ந்து இளம்பெண் பலி: 4 வயது சிறுவன் ட்ரிகரை அழுத்தியதால் விபரீதம்; அசட்டையாக வைத்திருந்த அண்ணன்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: