ஏன் எதற்கு எப்படி?

?வாராகி அம்மன், காளி, நரசிம்மர் போன்ற உக்ர தெய்வங்களை வீட்டில் வைக்கக்கூடாது என்று சொல்கிறார்களே, உண்மையா? இது பற்றி சாஸ்திரம் சொல்வது என்ன?
– கணபதி, மடிப்பாக்கம், சென்னை.

வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வம், வழிபடக் கூடாத தெய்வம் என்று பாகுபாடு ஏதும் தெய்வ வழிபாட்டில் கிடையாது. எல்லா தெய்வங்களையும் வீட்டில் வழிபடலாம். இதுபற்றி சாஸ்திரம் சொல்வது என்னவென்றால், எந்த தெய்வமாக இருந்தாலும் கற்சிலையாக இருந்தாலும் சரி, பஞ்சலோக சிலையாக இருந்தாலும் சரி அந்த சிலைகளை வைத்து வழிபடுவதற்கு என்று பிரதிஷ்டாபன விதிமுறைகள் என்பது உண்டு. அந்த விதிமுறைகளை பின்பற்றி வீட்டில் வைத்து வழிபடுவது என்பது சாத்தியமில்லை என்பதால் அவற்றை ஆலயங்களில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. வீட்டில் வைத்து வழிபடுகின்ற சிலைகள் என்பது அளவில் சிறியதாக இருக்க வேண்டும். அங்குஷ்ட மாத்ரம் என்று அதற்கான அளவு குறிப்பிடப்படுகிறது. அதாவது அந்த வீட்டு எஜமானனின் கட்டை விரல் அளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் சிலைகளை வீட்டிலும் வைத்து வழிபடலாம். மாறாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தெய்வங்களின் படங்களை தாராளமாக வீட்டில் வைத்து வழிபடலாம். சாஸ்திர ரீதியாக இதில் எந்த தவறும் இல்லை.

?சில கோயில்களில் எதற்காக குழந்தைகளை விற்று வாங்குகிறார்கள்?
– ச.ஆறுமுகம், தூத்துக்குடி.

குழந்தைக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறது, வீட்டில் வாரிசு தங்குவதில்லை போன்ற தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கு இதுபோன்ற நம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள். ஆலயத்திற்கு குழந்தைகளை தானமாகக் கொடுத்துவிட்டு அதன்பின்பு அதே குழந்தைகளை ஆலயத்திற்கு பணத்தினை செலுத்தி விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். அவ்வாறு தெய்வத்தின் சந்நதியில் விலைக்கு வாங்கும்போது குழந்தைகள் நல்ல ஆரோக்யத்துடனும் தீர்க்காயுளுடனும் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது.

?ஜாதகத்தை வைத்து முன் பிறவி அடுத்த பிறவி என்று கணிக்க முடியுமா? இது ஜோதிடத்தில் சாத்தியமா?
– வண்ணை கணேசன், சென்னை.

சாத்தியமில்லை. ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் என்பது பூர்வ ஜென்ம கர்மா எப்படி உள்ளது என்பதை மட்டும்தான் சொல்லும். அதாவது பாவ புண்ணியத்தின் அளவினை மட்டும்தான் அறிந்துகொள்ள முடியும். இதைத்தான் பதவி பூர்வ புண்யானாம் என்று ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனை விடுத்து முற்பிறவியில் இந்த ஜாதகர் இப்படி பிறந்தார், இதுபோன்ற செயல்களைச் செய்திருக்கிறார், அடுத்த பிறவியில் இப்படிப் பிறப்பார், ராஜபோக சுகத்தினை அனுபவிப்பார் என்று சொல்வதெல்லாம் ஜோதிடரின் கற்பனையே. ஜோதிடம் என்பது வானவியல் சார்ந்த அறிவியலே. உண்மையான ஜோதிடத்தில் இதுபோன்ற கருத்துக்களுக்கு இடமில்லை. இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. முதலில் அடிப்படையான ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள். ஒருவன் மனிதனாகப் பிறவி எடுத்திருக்கிறான் என்று சொன்னாலே அவன் முற்பிறவியில் பாவத்தை விட அதிகமாக புண்ணியம் செய்திருக்கிறான் என்றுதான் பொருள். இந்த உலகத்தில் லட்சோபலட்சம் உயிரினங்கள் இருக்கும்போது அத்தனை பிறவிகளையும் தாண்டிதான் மனிதப்பிறவி என்பதை அடைந்திருக்கிறோம் என்பதை உணர வேண்டும். இதைத்தான் ஔவையார் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார். கிடைத்தற்கரிய இந்த மானிடப் பிறவியில் புண்ணிய கர்மாக்களை அதிகமாகச் செய்து மறுபிறவி இன்றி மோட்சம் பெறுவதற்கான வழியினைத் தேட வேண்டும்.

?லட்சுமி கடாட்சம் என்பது பணத்தை மட்டும் குறிக்குமா?
– அ. யாழினிபர்வதம், சென்னை.

நிச்சயமாக இல்லை. தனலட்சுமி, தான்ய லட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, தைர்ய லட்சுமி, சந்தான லட்சுமி, சௌபாக்ய லட்சுமி என்று அஷ்டலட்சுமிகளைக் குறிப்பிடுகிறார்கள். இதில் முக்கியமாக வித்யா லட்சுமி எனும் கல்வியறிவும் தைர்ய லட்சுமி எனும் மனோதிடமும் இருந்தால் மற்ற லட்சுமிகள் அனைவரும் நம்மை விட்டு அகலமாட்டார்கள். இவற்றோடு முக்கியமாக ஆரோக்யலட்சுமி என்பவரும் இணைந்தால்தான் நிம்மதியான வாழ்வினைப் பெற முடியும். ஆக எவர் ஒருவர் மன நிம்மதியுடனும் மனமகிழ்ச்சியுடனும் தேக ஆரோக்யத்துடனும் வாழ்கிறாரோ அவரே முழுமையாக
லட்சுமி கடாட்சம் பெற்றவர் ஆவார்.

?நரி, கழுதை படங்களை வீட்டில் மாட்டி வைத்தால் அதிர்ஷ்டமா?
– த. சத்தியநாராயணன், அயன்புரம்.

நிச்சயமாக இல்லை. இவை அனைத்தும் மூடநம்பிக்கையே. கழுதை படத்தை மாட்டி வைத்து என்னைப்பார் யோகம் வரும் என்று அதில் எழுதி வைத்து வழிபட்டுவந்தால் யோகம் என்பது நிச்சயம் வராது. அந்த கழுதையைப் போல நாமும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். கழுதை பொதி சுமப்பது போல் நாமும் கடினமாக உழைத்தால் வாழ்வில் முன்னேறலாம் என்பதையும் இக்கட்டான சூழலில் நரியைப்போல் தந்திரமாக செயல்பட்டு தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டால் யோகம் என்பது தானாக வரும். அதனை விடுத்து கழுதை படத்தை மாட்டி வைப் பதும் நரியின் ஊளைச் சத்தம் யோகம் தரும் என்றும் நினைப்பதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே.

?ஆண், பெண் மறுபிறப்பிலும் அதே மாதிரி பிறப்பார்களா?
– முருகன்.

இல்லை. மறுபிறவி என்பது இப்படித்தான் அமையும் என்று யாராலும் தீர்மானிக்க இயலாது. அவரவர் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறுதான் மறு பிறவி என்பதும் அமைகிறது. இதைத்தான் நம்முடைய தர்மசாஸ்திரம் எடுத்துச் சொல்கிறது. இவர் மீண்டும் ஆணாகத்தான் பிறப்பார் என்றோ பெண்ணாகத்தான் பிறப்பார் என்றோ வரையறுக்க முடியாது. மீண்டும் மனிதப்பிறவிதான் கிடைக்கும் என்பதையே வரையறுக்க இயலாது. இவை அனைத்தையும் நாம் இந்தப் பிறவியில் செய்யும் செயல்கள்தான் தீர்மானிக்கும்.

?வெள்ளிக்கிழமை ஆண்குழந்தையாக பிறக்கக்கூடாது என்று சொல்கிறார்களே, இது சரியா?
– ஜெ. மணிகண்டன், வேலூர்.

சரியில்லை. இதுபோன்ற கருத்துக்கள் நம்முடைய சாஸ்திரத்தில் எங்கும் கூறப்படவில்லை. வெள்ளிக்கிழமை நாள் என்பது மகாலட்சுமி அம்சம் பொருந்தியது என்பதால் வெள்ளிக்கிழமையில் பெண்குழந்தை பிறந்தால் ஆஹா மகாலட்சுமியே உனக்கு பெண்ணாகப் பிறந்திருக்கிறாள் என்று அந்தப் பெற்றோரை உற்சாகப்படுத்துவதற்காக சொல்வார்கள். அதற்காக மற்ற நாட்களில் பெண் குழந்தைகள் பிறக்கக்கூடாது என்று நினைப்பதும் தவறு. பெண் குழந்தை எந்த நாளில் எந்த நேரத்தில் பிறந்தாலும் அது மகாலட்சுமியின் அம்சம்தான். ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் எந்த நாளில் பிறந்தாலும் அது நமக்கு அதிர்ஷ்டம்தான். நமது உயிரணுவைத் தாங்கி ஒரு குழந்தை பிறக்கும்போது அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அடியேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் பிறந்தவன்தான் என்பதையும் கூடுதல் தகவலாக தாழ்மையுடன் இங்கே பதிவு செய்கிறேன்.

The post ஏன் எதற்கு எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: