மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள்..!!

மயிலாடுதுறை: பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்திருக்கும் அதேவேளையில், வெளிநாடுகளில் பணிபுரியும் பலரும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊருக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி முன்மாதிரியாக திகழ்ந்துள்ளனர். அமெரிக்காவின் சிகாகோ நகரில் பணியாற்றி வரும் சிவகுமார், தனது சொந்த ஊரான மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் அருகே உள்ள கிராமத்தில் வாக்களித்தார். ஐ.டி.ஊழியரான இவர், 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். எனினும் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் தாயகம் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்.

நியூசிலாந்தில் மருத்துவராக பணியாற்றி வரும் கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த வினோத் என்பவர் சுமார் ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊர் வந்து வாக்களித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்து காத்திருந்ததாகவும் அவர் உற்சாகமாக தெரிவித்தார். இதேபோல், லண்டனில் பொறியாளராக பணியாற்றி வரும் கும்பகோணம் ஆடுதுறையை சேர்ந்த முகமது முஸ்தக் என்பவர், சொந்த ஊருக்கு வந்து வாக்களித்தார். தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்த அவர், கடல் கடந்து வந்து தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். பின்னர் 3 நாட்களில் மீண்டும் அவர் லண்டன் புறப்பட்டு செல்கிறார்.

The post மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: