ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சென்னை: தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

வாக்கு சதவீதம் குறைந்தது கவலை அளிக்கிறது:

ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான். தேர்தலுக்காக கோடிக்கணக்கில் விளம்பரம் செய்வதில் எந்தவித பயனும் இல்லை. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை களைந்தாலே 100 % வாக்குகளை பதிவு செய்யலாம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலை ஆணையம் சரிபார்க்க வேண்டும்:

பட்டியலில் வாக்காளர் பெயர் உள்ளதா என்பதை ஆணையம் திரும்பத் திரும்ப சரிபார்க்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார். பிரச்சனை, சவால்களுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் சுமுகமாக நடத்தி உள்ளதற்கு பாராட்டுகள் என்றார்.

சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்குசதவிகிதம் குறைவது கவலை அளிக்கிறது:

பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இல்லை என்பது மிகவும் வலி நிறைந்தது. வாக்காளர்களின் பெயர் விடுபடாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் அலுவலரிடம் தமிழிசை புகார் மனு:

தென்சென்னை தேர்தல் அலுவலரிடம் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் மனு அளித்துள்ளார். தேனாம்பேட்டை கணபதி காலனியில் பூத் ஏஜென்டுகளை தாக்கிவிட்டு கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார் அளித்துள்ளார். தென் சென்னைக்கு உட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும். பூத் ஏஜென்ட்டை வெளியே அனுப்பிவிட்டு கள்ள ஒட்டு போட்டுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் வாக்குப்பதிவு நடத்தக்கூடாது:

வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்ததால் மக்கள் விடுமுறையாக நினைத்து விட்டார்கள். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் வாக்குப்பதிவு நடத்தக்கூடாது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. புதன், வியாழன் கிழமைகளில் தேர்தல் நடத்தினால் வாக்கு சதவீதம் உயரலாம் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

The post ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: