செல்பி எடுத்தாலும் கட்டணுமா? ஜிஎஸ்டி வரி அல்ல வழிப்பறி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: ஜிஎஸ்டி வரி அல்ல வழிப்பறி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக தலைவரும்- தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி!.

ஓட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஓட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டியைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர். அடுத்து என்ன செல்பி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?. 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு, 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது.

33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post செல்பி எடுத்தாலும் கட்டணுமா? ஜிஎஸ்டி வரி அல்ல வழிப்பறி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: