ஊட்டியில் சட்ட விரோத விற்பனை அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவா குருவிகள் பறிமுதல்

 

ஊட்டி, ஏப். 10: ஜாவா குருவிகள் ஜாவா ஹவாய், இலங்கை மற்றும் ஜமைக்கா போன்ற பல்வேறு நாடுகளின் தீவுப்பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த குருவிகள் தற்போது ஜாவா தீவில் 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. இதனால் அழிவின் விளிம்பில் இருப்பதால் பல்வேறு நாடுகளில் ஜாவா குருவிகள் செல்லப் பிராணிகளாக வளர்க்க தடை செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஊட்டி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் ஜாவா குருவிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மார்க்கெட்டில் ஜாவா குருவிகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் கடையில் விசாரணை மேற்கொண்டனர். ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு குருவிகள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் குருவிகளை வாங்கியவரிடமிருந்து இருந்து மீட்டு தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘ஜாவா குருவிகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருப்பது கடை உரிமையாளருக்கு தெரியவில்லை. இதனால், இந்த குருவிகளை விற்பனை செய்துள்ளார். தற்போது குருவிகளை பறிமுதல் செய்து விட்டோம். முதல் முறை என்பதால் அவருக்கு அறிவுரை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் இந்த குருவிகள் வண்டலூருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

The post ஊட்டியில் சட்ட விரோத விற்பனை அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவா குருவிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: