தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாஜ வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார். சூலூர் கலங்கல் நான்கு ரோட்டில் டிடிவி.தினகரன் பேசுகையில், ‘எடப்பாடி பழனிச்சாமிக்கு என் பெயரை கூட சரியாக உச்சரிக்க தெரியாது. சின்னம்மா இல்லை என்றால் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வந்திருக்க முடியாது. தவழ்ந்து தான் இப்பதவிக்கு வந்தேன் என்று எடப்பாடி பழனிசாமியே தெரிவித்து இருக்கிறார். 3 மாதத்திற்கு முன்பாகவே கூட்டணிக்கு வருமாறு என்னிடம் அண்ணாமலை தெரிவித்தார். கூட்டணிக்கு வந்த பிறகு வேட்பாளராக நிற்க வேண்டும் என்று தெரிவித்தார். அதன்படி, தேர்தலில் போட்டியிடுகிறேன்’ என்றார்.

முன்னதாக டிடிவி தினகரன், தனது பிரசாரத்தை தொடங்கும் போது அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் தாமரை..தாமரை என்று கத்தியதால் சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், சாரி… சாரி… நேற்று தேனியில் ஓட்டு கேட்டேன். அதே ஞாபகத்தில் பேசிட்டேன். அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறினார். பின்னர் பிரசாரம் முடிக்கும்போதும் தாமரையை வீழ்த்த இந்த பகுதி மக்கள் துணை புரிய வேண்டும் என்று பேசினார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள், வலுக்கட்டாயமாக கூட்டணி அமைத்தால் மனதில் இருக்கிறதைதான் பேசுவார்கள் என்று முணுமுணுத்தப்படி சென்றனர். இதனால் பாஜவினர் எரிச்சல் அடைந்தனர்.

The post தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி appeared first on Dinakaran.

Related Stories: