அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக கூறி, கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ஐ.பெரியசாமி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.ஆனால் அந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஐ.பெரியசாமியை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார். மேலும் இந்த இந்த விவகாரத்தில் முன்னதாக சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தார்.

மேலும் முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரியசாமி மீதான முறைகேட்டு வழக்கை நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹெச்.ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரையில், சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவு மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் விசாரணை ஆகியவைக்கு இடைக்கால தடை விதித்தது.

The post அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: