ஆந்திர மாநில தலைவராக ஷர்மிளா பொறுப்பேற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலம்

*சித்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பேச்சு

சித்தூர் : ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக ஷர்மிளா பொறுப்பேற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக பலம் கிடைத்துள்ளது என சித்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பேசினார். சித்தூர் காந்தி சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சித்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டிக்கி ராயல் தலைமை தாங்கி பேசியதாவது:

ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவராக ஷர்மிளா பொறுப்பேற்றதில் இருந்து, காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக பலம் கிடைத்துள்ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதாதால கட்சி, ஆம்ஆத்மி உள்பட பல்வேறு கட்சி மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சித்தூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் 10 தேர்தல் வாக்குறுதிகளை இன்று முதல் சித்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே பிரசாதம் மேற்கொள்ளப்படும். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திர மாநிலத்திற்கு 10 ஆண்டுகள் தனி அந்தஸ்து வழங்கப்படும். காஸ் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வருடத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் உள்ளிட்ட 10 அம்ச வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.இவற்றை நிறைவேற்ற இன்று முதல் வீடு வீடாகச் சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜ், இந்தியா மார்ச் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வாடா கங்கராஜ், ஆம் ஆத்மி கட்சி மாவட்டத் தலைவர் பிரசன்னா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆந்திர மாநில தலைவராக ஷர்மிளா பொறுப்பேற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலம் appeared first on Dinakaran.

Related Stories: